சமீபத்தில், நான் மிகவும் ரசித்து படித்த நாவல் “ஒரு கடலோர கிராமத்தின் கதை”. நாவலை முடித்தபின் முதலில் தோன்றியது எப்படி இந்த நாவல் சினிமாக்காரர்களிடமிருந்து தப்பியது ? நாவலை படமாக்கியிருந்தால், கடலோர பின்னணி கொண்ட, அசலான இஸ்லாமிய கதாபாத்திரங்களின் வார்ப்போடு நல்லதொரு திரைப்படம் கிடைத்திருக்கும். நமக்கு அத்தகையொரு அதிர்ஷ்டம் இன்று வரை வாய்க்கவில்லை; கிடைப்பதெல்லாம் அரைவேக்காட்டு – கடற்கரை வட்டாரத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பாஷை பேசிக்கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் – படங்கள். (கடல்,சிட்டிசன்,மரியான்)
படித்த எல்லா நாவல்களிலும் இப்படி தோன்றுவதில்லை, சில நாவல்கள்தான் சினிமாவிற்கு தோதாகப் படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது எளிமையான கதை,புதிதான கதைக் களன்,சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அவர்களுக்குள்ளே நடக்கும் உரையாடல்கள். கிளாசிக் நாவல்களுக்கேகுரிய தீவிர Monologue/Stream-of Consciousness writing – ஆதவன் சிறுகதைகளில் வருவது போல மனம் ஒரு கதாபாத்திரமாகி ஓயாது பேசிக்கொண்டயிருக்கும்போது படமாக்குவது வெகு சிக்கலாகிறது, அப்படியே படமாக்கினாலும், நாவலின் ஆன்மா சினிமாவில் இல்லாமல் போகிறது. இதனால்தான் வெகு சில கிளாசிக் நாவல்களே படமாக்கப்படுகின்றன அதில் சொற்பமே வெற்றியும் பெறுகின்றன.
கதை, முதல் உலகப் போர் காலகட்டத்தில், இஸ்லாமிய கிராமமான தேங்காய்பட்டணத்தில் நடக்கிறது. நாவலின் பிரதான கரு: தேங்காய்பட்டணத்தில் வாழும் பண்ணையாரான,வடக்கு வீட்டு முதலாளி எனும் அகமதுவின் வீழ்ச்சியை படிப்படியாக விவரிக்கிறது. ஆனால் Subtext’ஆக கல்வியறிவுயில்லாத அந்த மக்களில் விரவியிருக்கும் அதீத மூட நம்பிக்கைகள், போலி மதகுருமார்களின் மீது கண்மூடித்தனமான பற்று,பெண்ணடிமைத்தன போக்கு என பலதைப் மெல்லிய நாஞ்சில் நக்கலோடு பேசுகிறது.
இரண்டு விஷயங்கள் என்னை பெரிதும் கவர்ந்தது ஒன்று நாவல் முழுதும் வரும் உருது-மலையாளம் கலந்த வட்டார வழக்கு.இன்னொன்று இயல்பான கதாபாத்திரங்கள் – அவர்களின் இஸ்லாமிய பேர்கள்.
சுயலாபத்திற்காக, ஆங்கில கல்விமுறையை வரவிடாமல் தடுக்கும், மத ஆசிரியர் அசனார் லெப்பை; நிலபிரபுத்துவ வரைமுறைகளுக்குள் அடங்க விரும்பாத, முதலாளியை கிராமத்திலேயே தனியாளாக எதிர்க்கும் மஹ்முது; கருமியான பெட்டிக்கடை உசேன்பாய்; உச்சபட்சமாக, அந்த ஊரில் ஒரு ஜின்னை(சாத்தான்)ஒட்ட வந்திருப்பதாக சொல்லி, முதலாளி விட்டில் சுகமாய் வாழும் போலி மதகுருவான தங்கள் என, பிரமாதமான கதாபாத்திரங்கள் வாசிப்பை அலாதியாக்குகிறது.
எத்தனையோ பாடல்கள் பிடித்த போதிலும், ஒரு சில பாடல்களே மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.காரணம் – இப்பாடல்கள், இசையை,பாடல் வரிகளைத் தாண்டி ஒரு ஆழமான Nostalgic உணர்வை நமக்கு வெளிப்படுத்துகின்றன.தற்செயலாகவோ அல்லது விருப்பமாகவோ கேட்கும் பொழுது, இப்பாடல்கள் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை,நண்பர்களுடன் கழித்த பொழுதைகளை,பள்ளி வயதில் ஏற்பட்ட முதல் காதலை,நெருங்கிய உறவினர்களுடன் கொண்டாடிய தீபாவளியை என்று ஏதோ ஒரு இழந்த பழைய நிகழ்வை நினைவூட்டி,அதை மீண்டும் ஒரு முறை அசை போட நமக்கு உதவுகின்றன.இந்த மூன்று நிமிட ஆறுதலை, அறுபதுகளில் வாழ்ந்தவர்க்கு இசைஞானி அளிக்க முடியாது,எண்பதுகளில் வாழ்ந்தவர்க்கு ரஹ்மான் அளிக்க முடியாத,தொண்ணூறுகளில் வாழ்ந்தவர்களுக்கு யுவன் அளிக்க முடியாது.(சில பாடல்கள் விதிவிலக்காக இருக்கலாம்.)
இந்த அடிப்படையில், அண்மைக்காலமாக என்னில் அளவிடமுடியாத பாதிப்பை ஏற்படுத்திய பாடல்:
சரி, இந்த பாடல் அப்படி எந்த உணர்வை எனக்கு மீட்டித் தருகிறது ? பொதுவாகவே, எந்தவொரு நாவலைப் படிக்கும் பொழுதும் சன்னமான ஒலியில் பழைய ஹிந்தி/தமிழ் பாடல்களை கேட்பது வழக்கம்.அதிலும், பின்னிரவின் மயான அமைதியில் கேட்கும் பொழுது அந்தப் பாடல் நம்மை வேறொரு உலகத்திற்கு இட்டுச் செல்கின்றன, literally.(இதே பாடல் பகற் பொழுதில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை)
சமீபத்தில் நான் படித்த ஒரு மிகச் சிறந்த நாவல் – My Name is Red – துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக் எழுதியது.
பதினைந்தாம் நூற்றாண்டில,இஸ்தான்புல்லை தலை நகராகக் கொண்ட, ஓட்டோமொன் அரசவை காலத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்குப்பின் நடக்கும் நிகழ்வுகளை சித்தரிக்கும் நாவல்.
Novel – Basic Plot – *Spoilers*.
இஸ்லாம் மதத்தின் ஹெஜிரா ஆண்டு 1000’ம் ஆனதைக் கொண்டாட,ஒட்டொமொன் அரசர், தன் அரசின் வரலாற்றை, சாதனைகளை ஒரு புத்தகத்தில் பதிவு செய்ய விரும்புகிறார்.அதற்காக ஒரு ஒவிய-எழுத்தாளர் குழுவை நியமிக்கிறார்.அக்குழுவின் தலைவர் Enishte Effendi என்பவர்;இவர் வெனிஸ்,ஜெர்மனி நாடுகளை போல் ஒவியங்களை நாமும் வரைய வேண்டும் என விரும்புகிறார்.ஆனால் பலருக்கு இதில் விருப்பமில்லை.இது மதத்திற்கு எதிரானது என்றும் நாளடைவில் இது உருவ வழிபாட்டிற்கு நம்மை இட்டுச் சென்று விடும் என எச்சரிக்கின்றனர்.
Enishte Effendi, இதை மறுப்பதோடு இல்லாமல் ஐரோப்பாவின் ஒவியக் கலையை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறார்.இந்த சூழலில்,அந்த புத்தகத்தை தயாரிக்கும் குழுவில் பணியாற்றும் ஒரு கலைஞன் மர்ம்மான முறையில் கொலை செய்யப் படுகிறான்.அவனுக்கு மாற்றாக, புத்தகத்தை அலங்கரிக்க,ஒவியங்களை வரைய,அதற்கு பொருத்தமான எழுத்துக்களை எழுத, தன் தங்கையின் மகனை வருமாறு அழைக்கிறார்.
Black, சிறு வயதில் தந்தையை இழந்து,தாயோடு Enishte Effendi வீட்டில் வளர்கிறான்.பருவ வயதில் Enishte Effendi மகளிடம்(Shekure) காதலை சொல்கிறான்.அவள் ஏற்க மறுக்கிறாள்.பின் அங்கிருந்து வெளியேறி,பாரசீகத்தில் அரசவை குமாஸ்தாவாக பணியாற்றும் போதுதான் தன் மாமாவான Enishte Effendiயிடமிருந்து அழைப்பு வருகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்தான்புல் வருகிறான் Black.இன்னும் அவனால் Shekure‘ஐ மறக்க முடியவில்லை.ஆனால், Shekure‘க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது.போருக்குச் சென்ற அவள் கணவன் நாலு வருடம் ஆகியும் திரும்பாததால் தன் தந்தையின் வீட்டில் வசிக்கிறாள்.அவளை சந்தித்து மீண்டும் தன் காதலைச் சொல்கிறான்.இதன்பின் நடக்கும் சம்பவங்களே My Name is Red.
இந்த நாவல் First-Person narrative mode’இல் சொல்லப்படுகிறது இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்,ஒரே கதாபாத்திரம் நாவலின் கதையை முன்னகர்த்தவில்லை;ஒவ்வொரு கதாபாத்திரத்தின் First-Person narration வழியாக நாவல் நகர்கிறது.
நாவல் நெடுக பாமுக்கின் அசூர உழைப்பு தெரிகிறது.நாவலை குறைந்தது மூன்று முறையேனும் படிக்காமல் அதன் அனைத்து Subtext’களை புரிந்த கொள்ள இயலாது.(நான் ஒரு முறை தான் படித்தேன்) அந்தளவுக்கு நாவலுக்குள்ளே பல கிளைக் கதைகள்,நுண்தகவல்கள்,கதாபாத்திரங்கள் இருக்கின்றன.படிப்பதற்கு கொஞ்சம் கடினமான நாவல்தான் .
பதினைந்தாம் நூற்றாண்டு துருக்கியில் ஒவியக்கலைக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டது,கலைஞர்கள் எந்தளவுக்கு ஒவியத்தை நேசித்தார்கள்,ஐரோப்பாவின் பாதிப்பை தடுக்க முடியாமல் தன் பாரம்பரியத்தின் உன்னத கலை எப்படி தடுமாறியது என்பதை மிக கவனமாக சொல்லியிருக்கிறார்.
நாவலின் மிகச் சிறப்பம்சம் பாமுக் விவரிக்கும் சூழல்;பதினைந்தாம் நூற்றாண்டின் இஸ்தான்புல்லை வெறும் வார்த்தைகளைக் கொண்டு நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்– முடி வெட்டும் கடைகள்,காஃபி ஹவுஸ்,ஊரெங்கும் படர்ந்திருக்கும் உறைபனி,அதன் வழியே நடமாடும் கதாபாத்திரங்கள் என அனைத்தும் மிக அழகு.
இந்த நாவலைப் படிக்கும் போதெல்லாம் இப்பாடலைக் கேட்டதன் விளைவு :
ஜெமினி-சாவித்திரி, ஜி.ராமநாதனின் BeautifulOrchestration, சுசீலாவின் குரல்,பாரதியின் கவிதையைத் தாண்டி என்னை முழுதும் ஆக்ரமித்தது – இஸ்தான்புல்லின் பனி படர்ந்த வீதியில் உலாவும் Black-Shekure மட்டுமே.
P.S. இந்த நாவலைப் பார்த்தவுடன் வாங்க இன்னொரு முக்கிய காரணம்,அதன் அசத்தலான ஆரம்பம்தான்.(காக்க காக்க படத்தின் முதல் காட்சியை நினைவு படுத்துகிறது)
Iam nothing but a corpse now,a body at the bottom of a well.Though I drew my last breadth long ago and my heart has stopped beating,no one apart from the vile murderer knows what happened to me.As for that wretch,he felt for my pulse and listened for my breadth to be sure I was dead, and then kicked me in the midriff,carried me to the edge of the well,raised me up and dropped me below.As I fell,my head,which he’d smashed with a stone,broke apart; my face,my forehead and cheeks were crushed;my bones shattered and my mouth filled with blood.
ஒரு நல்ல நாவலோ அல்லது நாவலில் இருக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரமோ மனதை பாதிக்கும்.அதன் விளைவாக,சில நாட்கள் அந்த நாவலின் நினைவுகள் விடாது மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.ஆனால் ஒரு நாவலின் முதல் வரியை மட்டும் படித்து,அது ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து வெளியே வர முடியாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.அந்த நாவலைப் படிக்கும் எவரும் அதை உணர்வார்கள் என்றும் உறுதியாக சொல்லமுடியும்.
பொதுவாக நாவலின் முதல் வரி எப்படி இருக்கும் ?
கிழக்கு வெளுத்தது ; பறவைகள் கூட்டை விட்டு இரை தேட கிளம்பின.
அது ஒரு மலை மேல் இருக்கும் அழகிய கிராமம்.
ஆளில்லா சாலையில் அவன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
பஸ் சடாரென் திருப்பத்தில் வளைந்தது.
இப்படி பழகிவிட்டு :
அக்கரையிலிருந்து வந்த ஒரு நீராவிப் படகு பினாங்கு துறைமுகத்தை அடைந்தபோது மணி 3.36.
“கடலுக்கு அப்பால்” என்ற நாவலின் முதல் வரி அது.படித்த போது பிரமிப்பின் உச்சத்துக்குச் செல்லாமல் இருக்க முடியவில்லை.நாவலை எழுதியவர் ப.சிங்காரம்.
ப.சிங்காரம் மொத்தம் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார்.
கடலுக்கு அப்பால்.
புயலிலே ஒரு தோணி.
இரண்டும் நாவல்களும் இரண்டாம் உலகப்போர் பின்னணியில் புனையப்பட்டது.
ப.சிங்காரம், இளம் வயதில் மலேசியாவில் இருந்த போது பல ராணுவ மூகாம்களுக்கு சென்றிருக்கிறார்;ராணுவ வீரர்களுடன் நல்ல நட்பு இருந்திருக்கிறது.அதன் மூலம் யுத்த சம்பவங்களை தெரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார்.இரண்டு நாவல்களும் தமிழில் மிக முக்கிய நாவல்கள் என இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் ஒப்புகொள்கிறார்கள்.தமிழில் யுத்த களனை கொண்டு நாவல் இருப்பது மிகுந்த ஆச்சர்யம்.துரதிர்ஷடவசமாக நம் பலருக்கும் இது தெரியவில்லை. நாவலைப் பிரசுரிக்க ப.சிங்காரம் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்.1950’ல் கடலுக்கு அப்பால் எழுதியுளளார்.ஆனால் 1959’ல்தான் அது பிரசுருமாகியது.
தமிழினி பதிப்பகம் இப்போது இந்த இரண்டு நாவல்களையும் மறு பதிப்பு செய்கின்றன.(பதிப்பகம் தவறாக இருந்தால் மன்னிக்கவும்) புத்தக கண்காட்சியில் கண்டிப்பாக கிடைக்கும்.விருப்பமுள்ளவர்கள் வாங்கி கொள்ளவும்