பாய்ஸ் படத்திற்குப் பிறகு இத்தனை எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு ஷங்கர் படத்திற்க்கு வந்ததில்லை. ஐ அந்த சாதனையை செய்திருக்கிறது. படம் வரும் முன்பே எனக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை,இருந்தும் ஒரிரு வாரங்கள் கழித்தாவது பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது தடாலடியாய் தாக்கிய இணைய விமர்சனங்கள் கொஞ்சமேனும் மிச்சமிருந்த ஆவலையும் துடைத்தெறிந்தது.600 INR தப்பியது.குழந்தைக்கு பாப்கார்ன் செலவு,ஆட்டோ செலவு வேறு சேர்த்தால் கூடுதல் 200 ரூபாய் சேர்த்துப் பிழைத்தது. பாதகமில்லை.ஜெயா டிவியில் விளம்பர இடைவேளைக்கிடையில் போனால் போகிறது என்று படத்தை போடும் போது பார்த்து கொள்ளலாம். நான் சொல்ல விரும்புவது இரண்டே விஷயங்கள்தான்.
தமிழ் சினிமாவில் இரண்டு அபத்தமான கற்பிதங்களை யார் கட்டமைத்தது என்று தெரியவில்லை.
1. ரசிகர்கள் முதல் பத்திரிகைகள் வரை படத்தின் பட்ஜெட்டை பற்றி ஏன் இத்தனை அலட்டிக்கொள்கிறார்கள் ? 100 கோடி 150 கோடி என்று இவர்கள் வாய் பிளக்கும்போது ஆச்சர்யமாகயிருக்கிறது. படத்தின் பட்ஜெட்டைப் பற்றி ஒரு ரசிகன் ஏன் இத்தனை ஆவல் காட்டவேண்டும் ? கழுதை, 5 லட்சமோ 50 கோடியோ ஒரே டிக்கெட் விலையைத்தான் நாம் கொடுக்க வேண்டும். 150 கோடி ஒரு படத்தின் தரத்தை மேம்படுத்திவிடுமா ?
ஒரு முழு ரயிலை வாடகைக்கு பிடித்தோம்,படம் பிடிக்க யாருக்குமே அனுமதி கிடைக்காத பகுதியில் மிகுந்த சிரமப்பட்டு படம் பிடித்தோம்,ஒப்பனை கலைஞரை நியுசாலாந்திலிருந்து வரவழைத்தோம்,ஹீரோ தினமும் 8 மணி நேர ஜிம்மில் இருந்தார் போன்ற உப்பு சப்பில்லாத Trivia’க்களை இயக்குனர்கள், நடிகர்கள் தொலைக்காட்சியில் உளரும் போது எரிச்சல் வருகின்றது.என்ன அபத்தமிது ? இந்த புண்ணாக்கு Details எல்லாம் ரசிகனுக்கு எதற்கு ? ஹீரோ பத்து முட்டை பச்சையாக குடித்தார்,பத்து நாள் சோறு தண்ணி பல்லில் படவில்லை என்பதற்காக ரசிகர்கள் படத்தை கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை சிறுபிள்ளைத்தனம் ? அன்று இரவு முழுதும் கண்விழித்து படித்து ஆனால் கேவலமாக பரிட்சை எழுதி Microprocessor’இல் அரியர் போட்ட examiner’ஐ நான் கோபித்த கொள்ள முடியுமா ?
கதைக்கான Inspiration எங்கிருந்து வந்தது,திரைக்கதை நுணுக்கங்களைப் பற்றி,காட்சிமொழியை கையாண்டவிதம் போன்றவற்றை விடுத்து சகலத்தையும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
2. இதோடு இன்னொரு அபத்தம் கெட்-அப்பை மாற்றுவது. நடிப்பென்பது வெறும் கெட்-அப்பை மாற்றுவது மட்டுமா ? ஏன் நம் நடிகர்கள் கெட்-அப்பை மாற்றுவதில் ஆலாய் பறக்கிறார்கள் ? நாலு மணி நேரம் பொறுமையாக மேக்கப்பை போட்டு கொண்டால் நல்ல நடிப்பாய்விடுமா ? என்ன கொடுமை இது!! உடல்மொழி,பாத்திரத்தன்மை உணர்ந்து Underplay/Overplay செய்வது,வசன உச்சரிப்பில் கவனம் செலுத்துவது போன்றவற்றை ஏன் காற்றில் பறக்க விட்டுவிடுகிறார்கள் ?
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த Lead Performance’கள் எல்லாம் சாதாரண கெட்-அப்பில் வந்தவையே: வறுமையின் நிறம் சிகப்பு, நிழல் நிஜமாகிறது, முதல் மரியாதை, தேவர் மகன், ஆடுகளம்,உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும்.
சுஜாதா, பாய்ஸில் சொன்னதை கொஞ்சம் மாற்றி சொன்னால் :
சினிமாவை/நடிப்பை எல்லாம் செய்யாதீங்க வாழ்க்கையிலிருந்து எடுங்க.