RSS

ஐ.

பாய்ஸ் படத்திற்குப் பிறகு இத்தனை எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு ஷங்கர் படத்திற்க்கு வந்ததில்லை. ஐ அந்த சாதனையை செய்திருக்கிறது. படம் வரும் முன்பே எனக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை,இருந்தும் ஒரிரு வாரங்கள் கழித்தாவது பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது தடாலடியாய் தாக்கிய‌ இணைய விமர்சனங்கள் கொஞ்சமேனும் மிச்சமிருந்த ஆவலையும் துடைத்தெறிந்தது.600 INR தப்பியது.குழந்தைக்கு பாப்கார்ன் செலவு,ஆட்டோ செலவு வேறு சேர்த்தால் கூடுதல் 200 ரூபாய் சேர்த்துப் பிழைத்தது. பாதகமில்லை.ஜெயா டிவியில் விளம்பர இடைவேளைக்கிடையில் போனால் போகிறது என்று படத்தை போடும் போது பார்த்து கொள்ளலாம். நான் சொல்ல விரும்புவது இரண்டே விஷயங்கள்தான்.

தமிழ் சினிமாவில் இரண்டு அபத்தமான கற்பிதங்களை யார் கட்டமைத்தது என்று தெரியவில்லை.

1. ரசிகர்கள் முதல் பத்திரிகைகள் வரை படத்தின் பட்ஜெட்டை பற்றி ஏன் இத்தனை அலட்டிக்கொள்கிறார்கள் ? 100 கோடி 150 கோடி என்று இவர்கள் வாய் பிளக்கும்போது ஆச்சர்யமாகயிருக்கிறது. படத்தின் பட்ஜெட்டைப் பற்றி ஒரு ரசிகன் ஏன் இத்தனை ஆவல் காட்டவேண்டும் ? கழுதை, 5 லட்சமோ 50 கோடியோ ஒரே டிக்கெட் விலையைத்தான் நாம் கொடுக்க வேண்டும். 150 கோடி ஒரு படத்தின் தரத்தை மேம்படுத்திவிடுமா ?

ஒரு முழு ரயிலை வாடகைக்கு பிடித்தோம்,படம் பிடிக்க யாருக்குமே அனுமதி கிடைக்காத பகுதியில் மிகுந்த சிரமப்பட்டு படம் பிடித்தோம்,ஒப்பனை கலைஞரை நியுசாலாந்திலிருந்து வரவழைத்தோம்,ஹீரோ தினமும் 8 மணி நேர ஜிம்மில் இருந்தார் போன்ற உப்பு சப்பில்லாத Trivia’க்களை இயக்குனர்கள், நடிகர்கள் தொலைக்காட்சியில் உளரும் போது எரிச்சல் வருகின்றது.என்ன அபத்தமிது ? இந்த புண்ணாக்கு Details எல்லாம் ரசிகனுக்கு எதற்கு ? ஹீரோ பத்து முட்டை பச்சையாக குடித்தார்,பத்து நாள் சோறு தண்ணி பல்லில் படவில்லை என்பதற்காக ரசிகர்கள் படத்தை கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை சிறுபிள்ளைத்தனம் ? அன்று இர‌வு முழுதும் க‌ண்விழித்து ப‌டித்து ஆனால் கேவலமாக‌ ப‌ரிட்சை எழுதி Microprocessor’இல் அரியர் போட்ட examiner’ஐ நான் கோபித்த கொள்ள முடியுமா ?

கதைக்கான Inspiration எங்கிருந்து வந்தது,திரைக்கதை நுணுக்கங்களைப் பற்றி,காட்சிமொழியை கையாண்டவிதம் போன்றவற்றை விடுத்து சகலத்தையும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

2. இதோடு இன்னொரு அப‌த்த‌ம் கெட்-அப்பை மாற்றுவ‌து. ந‌டிப்பென்ப‌து வெறும் கெட்-அப்பை மாற்றுவ‌து ம‌ட்டுமா ?  ஏன் ந‌ம் ந‌டிக‌ர்க‌ள் கெட்-அப்பை மாற்றுவ‌தில் ஆலாய் ப‌றக்கிறார்க‌ள் ? நாலு ம‌ணி நேர‌ம் பொறுமையாக மேக்க‌ப்பை போட்டு கொண்டால் ந‌ல்ல‌ ந‌டிப்பாய்விடுமா ? என்ன‌ கொடுமை இது!! உட‌ல்மொழி,பாத்திர‌த்த‌ன்மை உண‌ர்ந்து Underplay/Overplay செய்வ‌து,வ‌ச‌ன‌ உச்ச‌ரிப்பில் க‌வ‌ன‌ம் செலுத்துவ‌து போன்றவ‌ற்றை ஏன் காற்றில் ப‌ற‌க்க‌ விட்டுவிடுகிறார்க‌ள் ?

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த Lead Performance’கள் எல்லாம் சாதாரண கெட்-அப்பில் வந்தவையே: வ‌றுமையின் நிறம் சிக‌ப்பு, நிழ‌ல் நிஜ‌மாகிற‌து, முத‌ல் ம‌ரியாதை, தேவ‌ர் ம‌க‌ன், ஆடுக‌ள‌ம்,உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும்.

சுஜாதா, பாய்ஸில் சொன்ன‌தை கொஞ்ச‌ம் மாற்றி சொன்னால் :

சினிமாவை/நடிப்பை எல்லாம் செய்யாதீங்க‌ வாழ்க்கையிலிருந்து எடுங்க‌.

 
Leave a comment

Posted by on January 30, 2015 in Cinema

 

காதல் ஆசை யாரை விட்டதோ…

அஞ்சான் பாடல்கள் விடாது தொலைக்காட்சி வழியாக துரத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நாளும் நின்று நிதானித்து ரசித்ததில்லை.ஆனால், நேற்று காலை தொலைக்காட்சியில் யதேச்சையாக ஒலித்துகொண்டிருந்த‌போதுதான் – இத்தனைக்கு அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த பரபரப்பில்- சட்டென பிடித்துப்போனது.கடந்த சில நாட்களாக ஷமிதாப் பாடல்களை கேட்டுகொண்டிருந்தவன் இன்று ஏனோ அதை கேட்கப் பிடிக்காமல் இந்த பாடலையே repeat audience’ஆக கேட்டுக்கொண்டிருக்கிறேன். யுவனின் தமிழ் உச்சரிப்பு அத்தனை சிலாக்கியமாக இல்லாவிட்டாலும் அவர் காதல் பாடல்களில் ஒரு தனி வசீகரம்,மயக்கம் இருக்கத்தான் செய்கிறது.இந்தப் பாடலுக்கு Qawwali style கூடுதல் அழகை தருகிறது.இஸ்லாத்துக்கு மாறியதற்கு Tribute’ஆக Yuvan இதை Compose செய்தாரா அல்லது தற்செயலாக இது நிகழ்ந்ததா ?

 
Leave a comment

Posted by on January 23, 2015 in Anjaan, ரசனை

 

Tags: ,

ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்

சமீபத்தில், நான் மிகவும் ரசித்து படித்த நாவல் “ஒரு கடலோர கிராமத்தின் கதை”. நாவலை முடித்தபின் முதலில் தோன்றியது எப்படி இந்த நாவல் சினிமாக்காரர்களிடமிருந்து தப்பியது ? நாவலை படமாக்கியிருந்தால், கடலோர பின்னணி கொண்ட‌, அசலான இஸ்லாமிய கதாபாத்திரங்களின் வார்ப்போடு நல்லதொரு திரைப்படம் கிடைத்திருக்கும். நமக்கு அத்தகையொரு அதிர்ஷ்டம் இன்று வரை வாய்க்கவில்லை; கிடைப்பதெல்லாம் அரைவேக்காட்டு – கடற்கரை வட்டாரத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பாஷை பேசிக்கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் – பட‌ங்கள். (கடல்,சிட்டிசன்,மரியான்)

படித்த எல்லா நாவல்களிலும் இப்படி தோன்றுவதில்லை, சில நாவல்கள்தான் சினிமாவிற்கு தோதாகப் படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது எளிமையான கதை,புதிதான கதைக் களன்,சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அவர்களுக்குள்ளே நடக்கும் உரையாடல்கள். கிளாசிக் நாவல்களுக்கேகுரிய தீவிர Monologue/Stream-of Consciousness writing – ஆதவன் சிறுகதைகளில் வருவது போல மனம் ஒரு கதாபாத்திரமாகி ஓயாது பேசிக்கொண்டயிருக்கும்போது படமாக்குவது வெகு சிக்கலாகிறது, அப்படியே படமாக்கினாலும், நாவலின் ஆன்மா சினிமாவில் இல்லாமல் போகிறது. இதனால்தான் வெகு சில‌ கிளாசிக் நாவல்களே படமாக்கப்படுகின்றன அதில் சொற்பமே வெற்றியும் பெறுகின்றன.

meeran

கதை, முதல் உலகப் போர் காலகட்டத்தில், இஸ்லாமிய கிராமமான தேங்காய்பட்டணத்தில் நடக்கிறது. நாவலின் பிரதான கரு: தேங்காய்பட்டணத்தில் வாழும் பண்ணையாரான,வடக்கு வீட்டு முதலாளி எனும் அகமதுவின் வீழ்ச்சியை படிப்படியாக விவரிக்கிறது. ஆனால் Subtext’ஆக கல்வியறிவுயில்லாத அந்த மக்களில் விரவியிருக்கும் அதீத மூட நம்பிக்கைகள், போலி மதகுருமார்களின் மீது கண்மூடித்தனமான பற்று,பெண்ணடிமைத்தன போக்கு என பலதைப் மெல்லிய நாஞ்சில் நக்கலோடு பேசுகிறது.

இரண்டு விஷயங்கள் என்னை பெரிதும் கவர்ந்தது ஒன்று நாவல் முழுதும் வரும் உருது-மலையாளம் கலந்த வட்டார வழக்கு.இன்னொன்று இயல்பான‌ கதாபாத்திரங்கள் – அவர்களின் இஸ்லாமிய பேர்கள்.

சுயலாபத்திற்காக, ஆங்கில கல்விமுறையை வரவிடாமல் தடுக்கும், மத ஆசிரியர் அசனார் லெப்பை; நிலபிரபுத்துவ வரைமுறைகளுக்குள் அடங்க விரும்பாத, முதலாளியை கிராமத்திலேயே தனியாளாக எதிர்க்கும் மஹ்முது; கருமியான பெட்டிக்கடை உசேன்பாய்; உச்சபட்சமாக, அந்த ஊரில் ஒரு ஜின்னை(சாத்தான்)ஒட்ட வந்திருப்பதாக சொல்லி, முதலாளி விட்டில் சுகமாய் வாழும் போலி மதகுருவான தங்கள் என, பிரமாதமான கதாபாத்திரங்கள் வாசிப்பை அலாதியாக்குகிறது.

 
Leave a comment

Posted by on January 15, 2015 in இலக்கியம், Novel

 

போங்க‌டா நீங்க‌ளும் உங்க‌ ஐடியும்

அன்றாட வாழ்க்கை ஏன் இத்தனை சலிப்பும்,அயர்ச்சியுமாய் இருக்கிறது ? எவ‌னோ ஒருவ‌ன் ப‌ட‌த்தின் ஆர‌ம்ப‌ காட்சிதான் நினைவிற்கு வ‌ருகிற‌து.வார‌த்தின் ஐந்து நாட்க‌ளும் ம‌னைவி க‌ட்டி த‌ரும் உண‌வை Tupperware’இல் அடைத்து;நானும் கச்சேரிக்கு போகிறேன் என்ற பேரில் பிற ஆடுகளோடு மந்தையில் கலந்து; பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று ஒரு பேருந்தைப் பிடித்து; எழவெடுத்த பெங்களூர் Traffic’இல் ஒன்னரை மணி கழித்து அலுவலகம் சென்று; அன்றைய இத்துப் போன-புடுங்கிய-ஆணியே-மறுபடி புடுங்ககூடிய பணியை தலையெழுத்தென்று ஏதோ ஆரம்பித்து;அரை மணி கழித்து என்ன கிழித்துவிட்டேன் என்று காபிக்கு கேன்டின் சென்று; திரும்பவும் மனமில்லாமல் லிஃப்டைப் பிடித்து என் த‌ள‌த்திற்கு வ‌ந்து ஆணி புடுங்க‌ ஒரு ம‌ணியில் ம‌திய‌ உண‌வு வேளை வ‌ர; திரும்ப‌ ஓடு Tupperware’த் தூக்கிக்கொண்டு.மொத்த‌ ஆடுக‌ளின் இரைச்ச‌லில் உண‌வை க‌வ‌ள‌ம் க‌வ‌ளமாக‌ உள்ளே த‌ள்ளி முடிந்த‌ கையோடு ஒரு க‌ட‌லை மிட்டாயை அல்ப்பாசைக்கு சாப்பிட்டுவிட்டு ம‌றுப‌டி……

பின் தேனீர் நேர‌த்திற்கு காத்திருந்து அதை குடித்து, சில‌ நேர‌ம் தேமேயென்று வேலை செய்து, EOD புடுங்கிய‌தை TL’இட‌ம் சொல்லி, வெறுத்துப் போய் ப‌ரோலில் வெளி வந்த‌ கைதி போல் முக‌த்தில் ப‌டும் பெங்க‌ளூர் குளிர் காற்றை ர‌சிக்க‌ ம‌ன‌மில்லாமல், ட்ராஃபிக் எப்ப‌டி இருக்குமோ என்ற‌ பீதியில் பேருந்தைப் பிடித்து 1 ம‌ணியில் வ‌ந்தால் சந்தோஷத்தில் திருச்செந்தூர் முருக‌னிற்கு ந‌ன்றி சொல்லி பொடி ந‌டையாய் வ‌ரும் போது கைபேசியில் ம‌னைவி இட்லி அரிசி இர‌ண்டு கிலோ வாங்கிட்டு வாங்க‌ என்ப‌தை நினைவு ப‌டுத்த‌, க‌டைக்குச் சென்றால், அரிசி குடோனில் இருக்குங்க‌ 1 நிமிஷ‌ம் இருங்க‌ எடுத்துட்டு வ‌ரேன் என்று சொல்லி க‌டைக்கார‌ரும் ந‌ம் பொறுமையை சோதித்து,அந்த 5 நிமிஷ சலிப்பைப் போக்க‌ க‌ண்ணாடி பாட்டில்களில் பள்ளிப் பிள்ளைகளுக்காக வைத்திருக்கும் க‌ட‌லை ப‌ர்பியையோ தேன் மிட்டாயையோ வாயில் ஒதிக்கு இட்லி அரிசியைப் பெற்று கொண்டு, After Hours ப‌ட‌த்தின் இறுதி காட்சியில் த‌ன் அலுவ‌ல‌க‌ம் முன் தொமென்று ஒரு டெம்போவிலிருந்து விழும் ஹீரோவைப் போல் வீட்டில் விழும் போது… அப்பா என்று 3.5 வ‌ய‌து ம‌க‌ன் சிரிக்க, வாடா என் ஷெல்வமே!!! என்று மனோகரா கண்ணாம்பா போல் அவனை கட்டியணைத்து,அவனிடம் மொத்த‌ நாள் வெறுமை,எரிச்ச‌ல்,இய‌லாம‌யை க‌ரைத்து – போங்க‌டா நீங்க‌ளும் உங்க‌ ஐடியும் என்று கத்த‌ வேண்டும் போல் இருக்கிற‌து.

 
Leave a comment

Posted by on November 12, 2014 in அனுபவம்

 

தமிழ் சினிமா பாடல்களின் அந்திமக்காலம்.

தமிழ் சினிமாவில், பாடல்களை கூர்ந்து கவனிப்பவர்கள் கடந்த 2-3 வருடங்களில் ஒரு பெரிய மாற்றத்தை அடைந்திருப்பதை உணர்ந்திருக்கலாம்.

முதலாவது: பாடல்களின் முக்கியத்துவம் வெகுவாக குறைந்திருக்கிறது. பெரிய ஹீரோக்கள் படங்களைத்தவிர அநேக படங்களில் சொற்ப பாடல்களே வருகின்றன‌. அதுவும் பின்னணியில் 2-3 நிமிடமே வரும் மான்டேஜ் பாடல்கள். இந்தப் பாடல்கள்கூட படத்தின் Promo’விற்காக‌, படத்தைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்புக்காக, முன்னமே Youtube’இல் வெளியிடப்படுகிறது. பாடல்களே இல்லாமல் படங்கள் வர ஆரம்பித்துவிட்டன‌. இது நல்லதா இல்லையா என்பதுற்குள் நாம் போக வேண்டாம்.

நான் சொல்ல வருவது, பத்து வருடம் முன்பு வரை படத்தின் பிரதான வணிகம் பாடல்களை நம்பியே இருந்தது.எத்தனை பெரிய மாஸ் ஹீரோவாக இருந்தாலும் சரி, அவரவர் படங்களில், பாடல்களை, ஹிட்டாக்க மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். 80’களில் ராஜா என்றால் 90’களில் ரஹ்மான். இதற்கு உதாரணமாக, கல்லூரிக்காலத்தில் நான் கண்ட‌ ஒரு விளம்பரத்தைச் சொல்கிறேன்: இடைவேளையில், ரஹ்மான் இசையமைப்பில் வெளிவரயிருக்கும் சங்கமம் படத்தின் ட்ரெய்லரை கண்டு மகிழுங்கள்.

ரஹ்மான் இசையால் ஒரு படத்தின் ட்ரெய்லர்கூட பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது அன்று.

ஆனால், இன்று ?  கீழ்கண்ட படங்களைப் பார்த்தாலே புரியும் பாடல்களின்பிடி எப்படி தளர்ந்து போனதென்று

  • சூது கவ்வும்.
  • நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.
  • பீட்சா.
  • ஆரண்ய காண்டம்.
  • ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
  • உதயம்.
  • விஸ்வரூபம்.
  • மெரினா.
  • கோலி சோடா.
  • அட்டகத்தி.

ஒரு காலத்தில் பாடல்களுக்கிடையில் உரையாடல் வந்தன, பின் 10 பாடல்களாகாயின, பின் 5-6 என மாறி இன்று 2-3 நிமிடத்தில் வந்து நிற்கிறது. இந்த போக்கை கவனித்தாலே சமூகத்தின் வேகத்தை கண்டு கொள்ளலாம். ஆலாய்ப் பறக்கும் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் யாருக்கும் பொறுமை இல்லை. ஆற அமர உட்கார்ந்து சாப்பிடும்/ரசிக்கும் காலம் போய் எல்லோருமே ஒரு பதட்ட மனநிலையில் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் முதல் Whatsapp வரை அனைத்திலும் ஒரு அவசரம்.Trailer’கூட இன்று Teaser ஆகிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முடிவை நேரடியாக தாவிப் பிடிக்க ஒரு வெறி.இந்த ரீதியில் பாடல்களின் இலக்கணம் மாறியதில் ஆச்சர்யமில்லை.

இரண்டாவது: பாடல்கள் அதன் முக்கியத்துவத்தை இழக்கும்போது தன்னியல்பாக இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் தங்களின் முக்கியத்துவத்தை இழக்க நேரிடுகிறது. இசையமைப்பாளர்க்கு பின்னணி இசையாவது இருக்கிறது பாடலாசிரியர்களுக்கு அதுவுமில்லை.வருங்காலத்தில், கவிதை புஸ்தகம் போடுவதைத் தவிர வேறு வழியில்லை. பாருங்கள், இன்று படத்திற்கு ஒரு புது இசையமைப்பாளர்,பாடலாசிரியர் அறிமுகமாகிறார்.

முன்பு போல், பாடல்களை ஹிட்டாக்கியேத் தீரவேண்டுமென என பெரிதான நெருக்கடி கிடையாது.படத்தை பப்ளிசிட்டி செய்ய ஒரு பாடல் பிரபல்யமாக வேண்டும். அவ்வளவே. அதற்கு துள்ளலலான இசையும், பாடலின் ஆரம்ப வரிகள் மிக எளிமையாகவும், முக்கியமாய், இளைஞர்களை கவர்வதாக இருக்க வேண்டும். இலக்கியம்,ஆழமிக்க கவித்துவ வரிகள் போன்ற புண்ணாக்குகளுக்கு இனி வரும் காலங்களில் இடமில்லை. விளைவு:தனுஷ், சிம்பு, செல்வராகவன், கானா பாலா எல்லாம் கவிஞர்களாகி விட்டனர்.

இன்று, சின்ன கண்ணன் அழைக்கிறான்,செளக்கியமா கண்ணே,அஞ்சலி அஞ்சலி,காற்றின் மொழி எல்லாம் செல்லுபடி ஆகாது.காசு பணம் துட்டு,Fy Fy Kalachify,வெரசா போகையிலே, ஜிங்குனமணி போன்ற வஸ்துக்கள்தான் விற்பனையாகும்.